கடந்த வியாழக்கிழமை அன்று சீன ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் சீனியர் கர்னல் வூ கியான் இந்தியா ஃபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிரம்மாஸ் ஏவுகணைகளை டெலிவரி செய்ததை குறித்து வெளியிட்ட செய்தி அறிக்கையில் இந்தியா ஃபிலிப்பைன்ஸ் இடையேயான பாதுகாப்பு உறவு மற்றும் செயல்பாடுகள் எந்தவொரு மூன்றாவது நாட்டையும் பாதிப்பதாக இருக்கக்கூடாது எனவும் மேலும் அந்த பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை பாதிக்கக்கூடியதாக இருக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
அதே போல கர்னல் வூ கியான் ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் அமெரிக்கா இடைத்தூர பலிஸ்டிக் ஏவுகணைகள் MRBM – Medium Range Ballistic Missiles நிலைநிறுத்தி வைத்துள்ளதையும் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார், அமெரிக்காவின் டைஃபான் ரக ஏவுகணைகள் ஃபிலிப்பைன்ஸில் உள்ள அமெரிக்க தளங்களில் உள்ளன மேலும் கடந்த வாரம் இதுவரை நடைபெற்றதிலேயே மிகப்பெரிய அமெரிக்க ஃபிலிப்பைன்ஸ் கூட்டு பயிற்சி நடைபெற்றுள்ளது.
சீனா ஃபிலிப்பைன்ஸில் இடையே இந்த மாதம் கடுமையான கடல்சார் எல்லை பிரச்சினைகள் ஏற்பட்ட நிலையில். சீனாவை தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணைகள் ஃபிலிப்பைன்ஸில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதை கடுமையாக எதிர்ப்பதாகவும் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை மேலும் அந்த பகுதி நாடுகளின் பாதுகாப்பு ஆகியவற்றை கடுமையாக பாதிக்கும் எனவும் கூறினார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா உடனான ஃபிலிப்பைன்ஸின் பாதுகாப்பு நடவடிக்கைகளை குறிப்பிட்டு சாத்தானுக்கு கதவுகளை திறக்கும் அந்த குறிப்பிட்ட நாடு இனியாவது இந்த மாதிரியான செயல்களை அனுமதிக்காது என நம்புவதாகவும் அப்படி மீறி செய்தால் அது அனைவருக்கும் இழப்பாக முடியும் எனவும் கர்னல் வூ கியான் எச்சரிக்கை விடுத்தார். இந்தியா கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி இந்திய விமானப்படையின் C-17 விமானம் மூலமாக ஃபிலிப்பைன்ஸிற்கு பிரம்மாஸ் ஏவுகணைகளை டெலிவரி செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.