
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் கிடக்கும் நேரத்தில் கூட பாகிஸ்தானுடைய ஆளில்லா விமான திட்டங்கள் அதிவேக முன்னேற்றத்தை பெற்று வருகின்றன, இது இந்தியாவுக்கு நல்லதல்ல.
ஏற்கனவே பாகிஸ்தான் துருக்கியிடம் இருந்து Baykar Defence நிறுவனத்தின் Bayratkar TB-2 ரக ஆளில்லா தாக்குதல் விமானங்களை வாங்கிய நிலையில் தற்போது மீண்டும் துருக்கியிடம் இருந்து அதிநவீன ட்ரோன்களை வாங்கியுள்ளது.
இந்த முறை துருக்கியின் Bayratkar நிறுவனத்தின் அதிசிறந்த தயாரிப்பான Akinci ரக ஆளில்லா தாக்குதல் விமானங்களை பாகிஸ்தான் பெற்றுள்ளது, இதன் காரணமாக அந்நாட்டு விமானப்படையின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும்.
இந்த ட்ரோன் 1.5 டன் அளவிலான வழிகாட்டப்பட்ட குண்டுகள், ஏவுகணைகள் ஆகியவற்றை சுமந்து கொண்டு சுமார் 6000 – 7500 கிலோமீட்டர் தூரம் வரை 40,000 அடி உயரத்தில் தொடர்ந்து 24 மணி நேரம் பறக்கும் ஆற்றல் கொண்டதாகும், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 361 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியதாகும்.
மறுபக்கம் நமது ஆளில்லா விமான திட்டங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன, இந்தியா தற்போது கண்காணிப்பு ட்ரோன்கள் பயன்படுத்தி வருகிறது ஆனால் பல்வேறு வகையான தாக்குதல் ட்ரோன்கள் நம்மிடம் இல்லை இதனை சரி செய்தாக வேண்டும்.
இந்தியா தற்போது Archer NG எனப்படும் அடுத்த தலைமுறை HALE ரக தாக்குதல் ட்ரோனையும் மேலும் MALE ரக ட்ரோன்களையும் உருவாக்கி வருகிறது, மேலும் அமெரிக்காவிடம் இருந்து உலகின் மிகச்சிறந்த MQ-9 ரக ஆளில்லா தொலைதூர தாக்குதல் ட்ரோன்களை வாங்க திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.