இந்தியா மற்றும் ரோமேனியா இடையே முதலாவது பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் !!

இந்தியா மற்றும் ரோமானியா ஆகிய நாடுகள் இடையே முதல்முறையாக ஒரு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்து ஆகியுள்ளது, இது இருநாடுகள் இடையேயான உறவில் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி ராணுவ பயிற்சி, ராணுவ தளவாடங்கள், ராணுவ மருத்துவம், ராணுவ தொழில்நுட்பம் மற்றும் அறிவியல், ராணுவ தொழில்நுட்ப உதவி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன.

இந்த ஒப்பந்தம் தலைநகர் தில்லியில் இந்தியா ரோமேனியா இருதரப்பு சந்திப்பின் போது கையெழுத்தானது, ரோமேனிய பாதுகாப்பு இணை அமைச்சர் சிமோனா கொஜகரு மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கிரிதர் அர்மானே ஆகியோர் கையெழுத்து இட்டனர்.

இது ஐரோப்பிய நாடுகள் பரவலாக இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தை சேர்ந்த நாடுகளுடன் நெருக்கத்தை அதிகரித்து கொள்ள வேண்டும் என்கிற பரவலான நோக்கத்தை அடிப்படையாக கொண்டது என மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ரோமேனியா அமைச்சர் சிமோனா இந்திய பாதுகாப்பு துறை நிறுவனங்கள் ரோமேனியா பாதுகாப்பு துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படலாம் குறிப்பாக மிக்-21 விமானத்தின் பராமரிப்பு பணிகளில் இந்தியாவுக்கு உதவ தயார் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.