இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கோவா மற்றும் கொச்சியில் அமைந்துள்ள இந்திய கடற்படையின் வானூர்தி தளங்களை மேம்படுத்தி நவீனமாக்க சுமார் 470 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை செய்துள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரத்தை மையமாக கொண்டு இயங்கும் Ultra Dimensions Pvt Ltd எனும் தனியார் நிறுவனத்துடன் தான் ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது ஆகவே இந்த நிறுவனம் தான் இந்த பணிகளை மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடற்படை வானூர்தி தளங்களை பொறுத்தவரை அனைத்து விதமான கடற்படை போர் விமானங்கள் , கண்காணிப்பு விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள், அவற்றின் என்ஜின்கள் மற்றும் பல்வேறு பாகங்களை பராமரித்து சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளும்.
இந்த நவீனமயமாக்கல் மூலமாக இனி வருங்காலத்தில் படையில் இணைக்கப்பட உள்ள பல்வேறு அதிநவீன வானூர்திகளை நல்ல முறையில் பராமரிக்க முடியும் இதற்காக பல்வேறு அதிநவீன கருவிகளும் நிறுவப்பட உள்ளன, இந்த பணிகளை மேற்கொள்ள அடுத்த மூன்று ஆண்டுகளில் 1.8 லட்சம் மணி நேரம் தேவைப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.