அருணாச்சல பிரதேச கவர்னரை சந்தித்து எல்லை நிலவரங்கள் குறித்து விவாதித்த கிழக்க பிராந்திய தளபதி !!

இந்திய தரைப்படையின் கிழக்கு பிராந்திய தளபதியான லெஃப்டினன்ட் ஜெனரல் ஆர்.பி. காலிதா அருணாச்சல பிரதேச கவர்னரும் ஒய்வு பெற்ற மூத்த தரைப்படை அதிகாரியுமான லெஃப்டினன்ட் ஜெனரல் கே டி பர்னாயக் அவர்களை வெள்ளிக்கிழமை அன்று சந்தித்தார்.

அப்போது இருவரும் எல்லையோர கள நிலவரங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனர், மேலும் ஆளுநர் எல்லையோர பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வீரர்களின் செயல்பாடுகளையும், மாநில அரசு மற்றும் பொதுமக்களுடன் இணைக்கமான உறவை கொண்டுள்ளதையும் வெகுவாக பாராட்டி உள்ளார்.

பின்னர் ஆளுநர் அருணாச்சல பிரதேசத்தில் குறிப்பாக திராப், லோங்டிங், சங்லாங் ஆகிய மூன்று மாவட்டங்களில் ராணுவ ஆட்சேர்ப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை நடத்துமாறும், ராணுவத்திற்கு தேவையான காய்கறிகள், பழங்கள், இறைச்சி, முட்டை போன்ற சீக்கிரம் கெடக்கூடிய பொருட்களை உள்ளுர் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யுமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.

கடைசியாக சில நாட்களுக்கு முன்னர் அருணாச்சல பிரதேசத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் வீரமரணம் அடைந்த ஹெலிகாப்டர் விமானிகளான லெஃப்டினன்ட் கர்னல் வி வி ரெட்டி மற்றும் மேஜர் ஜெயந்த் ஆறுமுகம் ஆகியோருக்கு தனது இரங்கல்களை தெரிவித்ததாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.