
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 17ஆம் தேதி பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் தாக்கல் செய்த அறிக்கையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான துணை ராணுவ படையினர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது பற்றிய தகவல்களை உள்துறை அமைச்சகத்திடம் கோரிய பாராளுமன்ற நிலைக்குழு இத்தகைய நிலை துணை ராணுவ படைகளின் பணிகளை பாதிக்கும் எனவும் ஆகவே உடனடியாக உள்துறை அமைச்சகம் இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.
மேற்குறிப்பிட்ட அறிக்கையில் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு Assam Rifles அசாம் ரைஃபிள்ஸ் மற்றும் CISF மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியவற்றில் ராஜினாமா அதிகரித்து உள்ளதாகவும், SSB எனப்படும் நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுடனான இந்திய எல்லையை பாதுகாக்கும் படையில் இது குறைந்து உள்ளதாகவும்,
BSF எனப்படும் எல்லை பாதுகாப்பு படை, ITBP எனப்படும் இந்தோ திபெத் எல்லை காவல் படை மற்றும் CRPF எனப்படும் மத்திய ரிசர்வ் காவல் படை ஆகியவற்றின் ராஜினாமா எண்ணிக்கைகள் ஏறத்தாழ அதே நிலையில் உள்ளதாகவும் மேலும் ஐந்து ஆண்டுகளில் ஆறு படைகளில் இருந்து 50,155 பேர் ராஜினாமா செய்து உள்ளதாகவும்
BSFல் இருந்து சுமார் 23553 வீரர்கள் ராஜினாமா செய்துள்ளது தான் அதிகம் எனவும் அடுத்தபடியாக CRPFல் இருந்து 13640 வீரர்கள் ராஜினாமா செய்து உள்ளதாகவும் அடுத்தபடியாக CISFல் இருந்து 5876 வீரர்கள் ராஜினாமா செய்து உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது, இதையடுத்து பாராளுமன்ற நிலைக்குழுவானது உள்துறை அமைச்சகத்திற்கு என்ன காரணத்தால் வீரர்கள் VRS மற்றும் ஒய்வு பெறுகின்றனர் என்பதை சர்வே நடத்தி கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தி உள்ளது
அதே போல் 2018-2022 வரையிலான காலகட்டத்தில் 654 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளதாகவும் அதிகபட்சமாக CRPFல் 230, BSFல் 174, குறைந்தபட்சமாக Assam Riflesல் 43 தற்கொலைகள் நடைபெற்றுள்ளது, குறிப்பாக நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் சட்டீஸ்கர் மாநிலத்தில் தான் அதிகமாக வீரர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் கடந்த மாதம் கூட இரண்டு வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் துணை ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பாராளுமன்றத்தில் அளித்த விளக்கத்தில் தற்கொலைகள் மற்றும் சக வீரர்களை கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகளுக்கார காரணிகளை கண்டறிய ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும்
இந்த குழு காரணிகளை கண்டறிந்து படை வீரர்களின் சூழல்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும் எனவும், அதிக பிரச்சினை உள்ள பதற்றமான பகுதிகளில் நீண்ட நாட்கள் வீரர்கள் பணி செய்தவதை தடுக்க சுழற்சி முறை அமல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது ஆகும்.
.