நமது நாட்டின் DRDO Defence Research & Development Organisation எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வடிவமைத்த SMART – Supersonic Missile Assisted Torpedo எனும் ஆயுதத்தை போர் கப்பல்களில் இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஆயுதம் அடிப்படையில் நீரடிகணையாகும் இதை ராக்கெட் வடிவத்தில் உருவாக்கி உள்ளனர், அதாவது சூப்பர்சானிக் வேகத்தில் பயணிக்கும் ராக்கெட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் இலக்கை நெருங்கியவுடன் ராக்கெட்டிடம் இருந்து பாராசூட் மூலம் பிரிந்து கடலுக்குள் சென்று பயணித்து எதிரி இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஆயுதமாகும்.
மாற்றியமைக்கப்பட்ட ப்ரளய் மற்றும் சாகரிகா ஏவுகணைகளில் நீர்மூழ்கி எதிர்ப்புக்கான அதிநவீன இலகுரக நீரடிகணை ALT Advanced Light Torpedo “Shyena” ஷயினா இணைக்கப்பட்டு இருக்கும், ஏவுகணை 650 கிலோமீட்டர் தூரம் செல்லும் அதே நேரத்தில் நீரடிகணையானது 20 கிலோமீட்டர் தொலைவு வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டது மேலும் இதனை கப்பல்களை அழிக்கவும் பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே இரண்டு முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட இந்த ஆயுதத்தை முதலில் கடற்கரையில் இருந்து மட்டும் பயன்படுத்த திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது போர் கப்பல்களில் இணைத்து பயன்படுத்தி கொள்ளவும் திட்டமிட்டு உள்ளனர்.
இந்த ஆயுதத்தின் தாக்குதல் வரம்பு மற்றும் அதி வேகம் காரணமாக இதை இடைமறிப்பது கடினமாகும் அதே நேரத்தில் எதிரி நம்மை தாக்கும் முன்பே எதிரியை தாக்கி அழிக்க வழிவகை செய்யும் அந்த வகையில் இந்திய கடற்படையின் பலம் பன்மடங்கு அதிகரிக்கும் என்றால் மிகையல்ல குறிப்பாக சீன கடற்படைக்கு இது பெரும் ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.