Breaking News

அமெரிக்கா, நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தினால் வடகொரிய அரசுக்கு முடிவுரை எழுதப்படும் அமெரிக்கா எச்சரிக்கை !!

  • Tamil Defense
  • November 6, 2022
  • Comments Off on அமெரிக்கா, நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தினால் வடகொரிய அரசுக்கு முடிவுரை எழுதப்படும் அமெரிக்கா எச்சரிக்கை !!

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஜெ ஆஸ்டின் அமெரிக்கா அல்லது நட்பு நாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் வடகொரிய அரசின் முடிவுரை எழுதப்படும் என காட்டமான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் தொடர்ச்சியாக வடகொரியா நடத்தி வரும் ஏவுகணை சோதனைகளால் தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் அச்சமும் பதட்டமும் பெருமளவில் அதிகரித்துள்ளது, இரண்டு நாடுகளும் ராணுவ தயார் நிலையை அதிகபடுத்தி கண்டனம் தெரிவித்துள்ளன.

அதே போல் சமீபத்தில் அமெரிக்கா வெளியிட்ட தங்களது புதிய தேசிய பாதுகாப்பு சீராய்வு கொள்கையில் வடகொரியாவின் அணு, வேதியியல் ஆயுதங்கள் பேராபத்து எனவும் ஆனால் அவற்றை பயன்படுத்தி விட்டு வடகொரிய அரசு தப்பித்து விட முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்கொரிய பாதுகாப்பு அமைச்சர் லீ உடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பேசிய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஆஸ்டின் வடகொரியாவின் செயல்பாடுகளை கவனித்து வருகிறோம், இருநாடுகளுக்கு இடையேயான உறவு மிகவும் வலுவாக உள்ளது, தென்கொரியாவின் பாதுகாப்புக்கு அமெரிக்கா துணை நிற்கும் என கூறியது குறிப்பிடத்தக்கது ஆகும்.