
சமீபத்தில் வடகொரியா ஒரு இடைத்தூர பலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியது, இது சுமார் 4600 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஜப்பான் வான்பகுதியை கடந்து பசிஃபிக் பெருங்கடலில் விழுந்தது.
இந்த ஏவுகணை சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஜப்பான் மற்றும் அமெரிக்க படைகள் கூட்டாக பயிற்சி மேற்கொண்டன, அதை தொடர்ந்து தென்கொரிய மற்றும் அமெரிக்க படைகள் கூட்டாக பயிற்சி மேற்கொண்டன.
அந்த வகையில் வடகொரிய எல்லைக்கு மிக அருகேயுள்ள தென்கொரியாவின் காங்நியூங் 18ஆவது போர் விமான படையணி தளத்தில் இருந்து தென்கொரிய மற்றும் அமெரிக்க படைகள் பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவின.
முதலில் அமெரிக்க மற்றும் தென்கொரிய படைகள் அமெரிக்க தயாரிப்பு MGM-140 ATACMS ரக குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவின, இவை வெற்றிகரமாக ஜப்பான் கடலில் உள்ள இலக்கை தாக்கின.
தொடர்ந்து தென்கொரிய படைகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு Hyunmoo-2 ஹியூன்மூ-2 குறுந்தூர பலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய போது அது மேலேழும்பி பின்னர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையில் விழுந்து வெடித்து சிதறியது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.