இரண்டாவது முறையாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் !!

  • Tamil Defense
  • October 25, 2022
  • Comments Off on இரண்டாவது முறையாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் !!

கடந்த மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஜெ ஆஸ்டின் உடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்கேய் ஷோய்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஜெ ஆஸ்டின் உடன் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் நிலைமை மோசமாகி வருவதாக தெரிவித்துள்ளார், அதே நேரத்தில் இருதரப்பும் புரிதலின்மையை தடுக்க தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர் பென் வால்லெஸ், ஃபிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டியர் லிகார்னு மற்றும் துருக்கி பாதுகாப்பு அமைச்சர் ஹீலூசி அகார் ஆகியோருடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அப்போது மூன்று பேரிடமும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் உக்ரைன் ஒரு அணு ஆயுதத்தை வெடிக்க வைத்து ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்ததாகவும் ஆனால் அதற்கான ஆதாரங்களை சமர்பிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஃபிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் லிகார்னு பேசும்போது உக்ரைன் விவகாரம் சுமுகமாக தீர்க்கப்பட வேண்டும் என்பதே ஃபிரான்ஸின் விருப்பம் எனவும் போரை மேலும் தூண்ட ஃபிரான்ஸ் விரும்பவில்லை என ரஷ்ய அமைச்சரிடம் கூறியதாகவும் அதேபோல் ரஷ்ய அமைச்சர் தன்னிடம் உக்ரைன் போர் கட்டுபாடை தாண்டும் நிலையை நோக்கி செல்வதாக கூறியதாகவும் தெரிவித்தார்.

மேலும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சர் கூறும்போது ரஷ்ய அமைச்சரின் குற்றச்சாட்டான உக்ரைன் போரை மேலும் அதிகமாக தூண்டி விட மேற்குலக நாடுகள் திட்டமிட்டுள்ளன என்பதை மறுத்து பேசியதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.