இந்திய குடியரசு தலைவருக்கு இந்திய முப்படைகளில் பணியாற்றும் மூத்த ராணுவ அதிகாரி ஒருவரை கவுரவ மருத்துவராக (Honorary Surgeon) நியமிப்பது வழக்கம்.
அந்த வகையில் தற்போது இந்திய தரைப்படையின் மருத்துவ சேவைகள் பிரிவின் இயக்குனராக பணியாற்றி வரும் லெஃப்டினன்ட் ஜெனரல் தல்ஜித் சிங் கவுரவ மருத்துவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவர் இந்திய தரைப்படையின் மருத்துவ படைப்பிரிவின் (AMC – Army Medical Corps) கர்னல் கமாண்டன்ட் ஆகவும் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
பள்ளி கல்விக்கு பின்னர் பூனேவில் உள்ள முப்படைகள் மருத்துவ கல்லூரியில் இணைந்து பயின்ற அவர் Paediatrics குழந்தைகள் நல பிரிவில் முதுநிலை பட்டபடிப்பை நிறைவு செய்து 1983ஆம் ஆண்டு அதிகாரியாக படையில் இணைந்தார்.
முப்படைகள் மருத்துவ சேவை படைப்பிரிவின் மூத்த குழந்தைகள், பச்சிளம் குழந்தைகள் நல ஆலோசகர் என்பதும் பல்வேறு மருத்துவ பட்டங்கள் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய விமானப்படையிலும் இந்திய தரைப்படையிலும் சேவையாற்றிய அனுபவம் வாய்ந்த இவர் 2020ஆம் ஆண்டு சிறப்பான சேவைக்காக பரம் விஷிஸ்ட் சேவா பதக்கம் பெற்றவர் ஆவார்.
தனது 38 வருட சேவையில் பெங்களூர் தெற்கு மற்றும் அலகாபாத் மத்திய விமானப்படை கட்டளையக மருத்துவமனைகள், பூனே தரைப்படை தெற்கு கட்டளையக மருத்துவமனைகளில் மூத்த மருத்துவர், மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடக மருத்துவ பல்கலைகழகங்களில் மூத்த முதுநிலை ஆய்வாளர் என முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார்.