இந்திய தரைப்படை கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆட்சேர்ப்பு முகாம்களை நடத்தவில்லை இதற்கு அரசு ஒப்புதல் அளிக்காதது காரணமாகும்.
தற்போது அனைத்து கட்டுபாடுகளையும் நாடு தழுவிய அளவில் தளர்த்திய போதும் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்களை நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை.
இதன்காரணமாக இந்திய தரைப்படையின் படையணிகளில் பற்றாக்குறை உணரப்பட்டு உள்ளதாகவும் ஆனால் படையணிகளின் இயங்குதிறனை தற்போதைக்கு இது பாதிக்கவில்லை எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் சுமார் 5000 அதிகாரி அல்லாத தரைப்படை வீரர்கள் ஒய்வு பெறும் நிலையில் தற்போது இந்திய தரைப்படையில் 1 லட்சத்து 20 ஆயிரம் வீரர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய தரைப்படை சுமார் 100 ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்களை நாடு முழுவதும் நடத்தி வந்தது என்பது கூடுதல் தகவல் ஆகும்.