
புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் எல்லை கட்டுபாட்டு கோட்டை தாண்டி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தின.
இந்த தாக்குதல் பாலகோட் பகுதியில் இயங்கி வந்த பயங்கரவாத முகாமை குறிவைத்து நடத்தப்பட்டது இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அதற்கு பழிவாங்கும் விதமாக பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் நமது கட்டுபாட்டில் உள்ள காஷ்மீரில் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்றன.
அப்போது இந்திய விமானப்படை தனது போர் விமானங்களை உடனடியாக அவற்றை எதிர்க்க அனுப்பி வைத்தது.
இதனை தொடர்ந்து வானில் நடைபெற்ற சண்டையில் பாகிஸ்தான் விமானப்படையின் எஃப்16 ரக போர் விமானத்தை அபிநந்தன் விரட்டி சென்று சுட்டு வீழ்த்தினார்.
அப்போது அவரது மிக்-21 போர் விமானம் எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளானது இதில் அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கி கொண்டார்.
பின்னர் தீவிர சர்வதேச அழுத்தம் மற்றும் இந்தியாவின் ராணுவ நடவடிக்கை குறித்த அச்சம் காரணமாக பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் அவரை விடுவித்தது.
இந்தியா வந்த பின்னர் பாகிஸ்தானில் இருந்த நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் விசாரணை என்ற பெயரில் அவரை சித்திரவதை செய்து காயப்படுத்தியது தெரிய வந்தது.
ஆகவே அவரின் வீரதீரத்தை பாராட்டி மத்திய அரசு போர்க்கால விருதான வீர் சக்ராவை அறிவித்தது, அதனை வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசு தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் க்ருப் கேப்டன் அபிநந்தன் வர்த்தமானுக்கு வீர் சக்ரா விருதை வழங்கி கவுரவித்தார்.