
சுமார் 22,000 கோடி ருபாய் மதிப்பில் இந்திய விமானப்படையின் அரத பழைய ஆவ்ரோ விமானங்களுக்கு மாற்றாக 56 சி295 விமானங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று அதற்கான ஒப்பந்தத்தில் ஏர்பஸ் டிஃபன்ஸ் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் கையெழுத்து இட்டுள்ளது.
56 விமானங்களில் 16 விமானங்கள் ஏர்பஸ் நிறுவனத்தால் ஸ்பெயினில் தயாரிக்கப்பட்டு 4 வருடங்களுக்குள் பறக்கும் நிலையில் டெலிவரி செய்யப்படும்.
மீதமுள்ள 40 விமானங்களும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தால் லக்னோவில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டு 10 வருடங்களுக்குள்ளாக விமானப்படையிடம் டெலிவரி செய்யப்படும் என கூறப்படுகிறது.
1960களில் வாங்கப்பட்ட 56 ஆவ்ரோ விமானங்களுக்கு மாற்றாக இந்த சி295 விமானங்களை வாங்க பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி இந்த மாத ஆரம்பத்தில் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.