பாகிஸ்தான் அணு ஆயுத நீர்மூழ்கிகளை பெற விரும்பும் காரணம் என்ன ??

பாகிஸ்தான் மிக நீண்ட காலமாகவே இந்தியாவை அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என மிரட்டி வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இந்தியாவின் அணு ஆயுத பயன்பாட்டு கொள்கை மாற்றம் அடைந்துள்ளது.

அதாவது முன்னர் இந்தியா முதலில் அணு ஆயுத தாக்குதல் நடத்தாது என்ற நிலையில் இருந்தது தற்போது தேவைபட்டால் அல்லது பாகிஸ்தான் அணு ஆயுத தாக்குதல் நடத்த முயற்சித்தால் நாங்கள் அணு ஆயுத தாக்குதலை நடத்துவோம் என இந்தியா தனது நிலையை மாற்றி கொண்டுள்ளது.

இது போதாத குறையாக இந்தியா அணுசக்தியால் இயங்கும் அணு ஆயுத நீர்மூழ்கிகள் மற்றும் தாக்குதல் நீர்மூழ்கிகளை படையில் படிப்படியாக இணைத்து வருகிறது, புல்வாமா தாக்குதலுக்கு பிறகான காலகட்டத்தில் இந்திய அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி ஒன்று பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் புகுந்தது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற பல்வேறு விஷயங்கள் பாகிஸ்தானை சற்றே யோசிக்க வைத்துள்ளது, இந்தியா தனது அணுசக்தி நீர்மூழ்கிகளை தனது எல்லைக்குள்ளேயே அனுப்பியது அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இந்தியாவிடம் இருந்து தன்னையும் தனது அணு ஆயுதங்களையும் பாதுகாக்கும் வகையில் கடலில் இருந்தும் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறனை பாகிஸ்தான் பெற அதிக தீவிரம் காட்டி வருகிறது.

பாகிஸ்தானால் தனது பொருளாதாரத்தை வைத்து கொண்டு அணுசக்தி நீர்மூழ்கிகளை கட்டமைக்க முடியாது ஆகவே வழக்கமான டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகளில் அணு ஆயுத ஏவுகணைகளை இணைக்க விரும்புகிறது.

தற்போதைய நிலையில் பாகிஸ்தான்வசம் பாபர்-3 எனும் நீர்மூழ்கியில் இருந்து ஏவப்படும் க்ருஸ் ஏவுகணை மட்டுமே உள்ளது மேலும் டீசல் எலெக்ட்ரிக் நீர்மூழ்கிகளால் ரகசியமாக அதிக தூரம் பயணிக்க முடியாது.

ஆகவே பாகிஸ்தான் தனது திட்டத்தை நிறைவேற்றினாலும் இந்த பிராந்தியத்தை தாண்டி அதனால் எதுவும் செய்ய முடியாது ஆனால் இந்தியா மட்டுமே இலக்கு என்றால் அது பாகிஸ்தானுக்கு வெற்றி தான்.

ஆகவே இந்தியா தனது பாதுகாப்பு கொள்கையை சற்றே சரிபார்த்து செயல்பட வேண்டும், வடகொரியாவும் பாகிஸ்தானை போன்றே திட்டமிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.