மஹாராஷ்டிராவில் 7 கிலோ யூரேனியம் பறிமுதல் 2 பேர் கைது !!

  • Tamil Defense
  • May 8, 2021
  • Comments Off on மஹாராஷ்டிராவில் 7 கிலோ யூரேனியம் பறிமுதல் 2 பேர் கைது !!

மஹாராஷ்டிர மாநிலம் நக்பாடாவில் அம்மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு காவலர்கள் சுமார் 7 கிலோ யூரேனியத்தை கைபற்றினர் அத்துடன் இரண்டு பேரையும் கைது செய்தனர்.

நக்பாடா பகுதி பயங்கரவாத தடுப்பு பிரிவு காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தானேவை சேர்ந்த ஜிகார் பான்ட்யாவை கடந்த ஃபெப்ரவரி 14ஆம் தேதி கைது செய்தனர்.

அப்போது அவனிடம் சிறிதளவு யூரேனியமும் இருந்தது மேற்படி விசாரணையின் போது அவன் அதை விற்க முயற்சி செய்து வருவதும் தானே நகரின் கிழக்குபகுதியில் அமைந்துள்ள மான்கர்ட்டில் வசித்து வரும் அபு தாஹீர் அஃப்ஸல் ஹூசைன் சவுதிரி என்பவனிடம் இருந்து யூரேனியத்தை பெற்றதும் தெரிய வந்தது.

இதனையடுத்து குர்லா ஸக்ராப் அசோசியேஷன் வளாகத்தில் வைத்து சவுதிரியை நேற்று காவல்துறையினர் கைது செய்தனர் அத்துடன் அவனிடம் இருந்து சுமார் 7 கிலோ மதிப்பிலான யூரேனியமும் பறிமுதல் செய்யப்பட்டது இதன் மதிப்பு சுமார் 21.3 கோடி ருபாய் ஆகும்.

பறிமுதல் செய்யப்பட்ட யூரேனியம் ட்ராம்பேயில் அமைந்துள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்திற்கு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது, ஆய்வின் போது அது இயற்கை யூரேனியம் எனவும் சுமார் 90% அளவுக்கு சுத்தமானது எனவும்,

இந்த வகை யூரேனியம் அதிக அளவில் கதிர்வீச்சை வெளிபடுத்தும் என்றும் மனித உயிருக்கு பேராபத்தை விளைவிக்கும் தன்மை கொண்டது எனவும் தெரிய வந்தது.

இதபற்றி பேசிய பயங்கரவாத தடுப்பு பிரிவு டிஐஜி ஷிவ்தீப் லாண்டே இது யூரேனியம் என்பதை இவர்கள் எப்படி அறிந்து கொண்டனர் எங்கிருந்து இதை பெற்றனர் யார் யாருக்கு விற்க முயன்றனர் என விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நாக்பூர் பிராந்திய அணு கனிம வள இயக்குனரகத்தின் இயக்குனர் சார்பில் புகார் அளிக்கபட்டு அணு சக்தி சட்டம்-1962ன் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.