பைத்தான்-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை !!

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது தேஜாஸ் விமானத்தில் இணைத்து பைத்தான்-5 வான் இலக்கு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

இந்த சோதனைகளுக்கு முன்னதாக பெங்களூருவில் ஏவியானிக்ஸ், தாக்குதல் கட்டுபாட்டு ரேடார், ஏவுகணை டெலிவரி அமைப்பு மற்றும் விமான கட்டுபாட்டு அமைப்பு ஆகியவை சோதனை செய்யப்பட்டன.

இதற்கு பின்னர் நேற்று கோவாவில் பைத்தான்-5 ஏவுகணையின் சோதனை நடைபெற்றது, அனைத்து தாக்குதல்களும் துல்லியமாக நடைபெற்றது என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

இந்திய விமானப்படையின் தேசிய விமான சோதனை மையத்தின் விமானிகள் தேஜாஸ் போர் விமானத்தை இயக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோதனையின் போது செமிலாக், ஏ.டி.ஏ, இந்திய விமானப்படை, இந்திய கடற்படை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் இருந்தனர்.

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் சதீஷ் ரெட்டி ஆகியோர் தங்களது பாராட்டுக்களை விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.