முதலாவது க்வாட் தலைவர்கள் மாநாடு இனிதே நிறைவு பெற்றது !!

நேற்று மாலை முதலாவது க்வாட் தலைவர்கள் மாநாடு இணையம் வழியாக நடைபெற்றது, இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் மோடி, ஜப்பானிய பிரதமர் யோஷிஹிடே சூகா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட மோரிசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் அதற்கான சவால்கள் குறித்த விஷயங்கள் பேசப்பட்டது.

மேலும் மியான்மர் ராணுவ ஆட்சி குறித்த பேச்சும் எழுந்தது, மியான்மர் ராணுவ ஆட்சிக்கு பின்னால் சீனா இருப்பதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி அறிக்கை வெளியிட்ட பிரதமர் மோடி ” க்வாட் அமைப்பானது உலக நன்மைக்கானது, காலநிலை மாற்றம், அறிவியல், தடுப்பூசி போன்ற முக்கிய பிரச்சினைகளில் இந்த அமைப்பு தனது ஈடுபாட்டை கொண்டிருக்கும். இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தலையாய விஷயம் முன்பு எப்போதையும் விட இனி அதிக ஒருங்கிணைப்புடன் செயல்படுவோம்” என்றார்.

அதிபர் ஜோ பைடன் பேசுகையில் “எங்களுக்கு முன்பு மிகப்பெரிய சவால் உள்ளது, இந்தோ பசிஃபிக் பிராந்தியம் சர்வதேச சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்” என்றார்

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பேசும் போது ” எங்களது சந்திப்பு இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் ஆகும்” என கூறினார்.

ஜப்பானிய பிரதமர் யோஷிஹிடே சூகா “இந்த சந்திப்பு மூலமாக க்வாட் அமைப்பு பரிணாம வளர்ச்சி அடைந்து உள்ளதாகவும், இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பு எங்களின் முக்கிய கொள்கை” என கூறினார்.

மேலும் இந்த வருடம் க்வாட் அமைப்பின் தலைவர்கள் இங்கிலாந்தில் நடைபெறும் ஜி-7 மாநாடு அல்லது நான்கு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டில் நேரடி சந்திக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

க்வாட் தலைவர்கள் சந்திப்பு உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.