கடற்படையில் செய்லர் ஆக பணியாற்றி வந்த சூரஜ் குமார் துபே ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். 25 வயதான இவர் கோவையில் உள்ள ஐ.என்.எஸ். அக்ரானி கடற்படை தளத்தில் தலைமைத்துவ பண்புகள் பயிற்சி பெற்று வந்தார்.
இதன் பின்னர் விடுமுறைக்காக செல்லும்போது சென்னையில் கடத்தப்பட்ட அவர் மூன்று நாட்கள் சென்னையில் அடைத்து வைக்கப்பட்டதாக தெரிகிறது.
பின்னர் மஹாராஷ்டிர மாநிலம் பால்கர் அருகே கோல்வாட் பகுதியில் காட்டுப்பகுதியில் உயிருடன் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவருக்கு தீ வைத்துள்ளனர்.
90% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர மும்பை அஸ்வினி கடற்படை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். இவருக்கு வருகிற ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் மராட்டிய, தமிழக மற்றும் ஜார்கண்ட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.