
இந்தியா சீனா பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் சாலை கட்டுமான பணியை துரிதப்படுத்தி உள்ளது எல்லை சாலைகளின் அமைப்பு.
கடந்த 45 வருடம் இல்லாத அளவிற்கு இந்தியா சீனா பிரச்சினைகள் தற்போது முற்றி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கல்வான் என்ற பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அருணாச்சலம் மற்றும் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் புதிய சாலைகள் அமைக்கும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
1962 போல மீண்டும் ஒரு நிலை ஏற்பட்டு விடாமல் தடுக்க தற்போது அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா 3488 கிலோமீட்டர் எல்லையை சீனாவுடன் பகிர்ந்து கொள்கிறது, இதில் 1126 கிலோமீட்டர் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ளது. எனவே அங்கு புதிய சாலைகள் அமைப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எல்லையில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது கிழக்கு பேங்கோங் ஏரி பகுதியில் இந்திய கடற்படையின் சிறப்பு படையான மார்கோஸ் கமாண்டோ வீரர்களையும் களமிறக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.