மேலதிக மூன்று பட்டாலியன்களை இந்திய நிலைகளுக்கு அருகே அனுப்பும் சீனா

இந்திய-சீன எல்லைப் பிரச்சனைை தொடர்பான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் சீனா தற்போது புதிய படைப் பிரிவுகளை இந்திய நிலைகளை ஒட்டி அனுப்பி வருகிறது.

கடந்த செப் 7 அன்று சூசுல் செக்டாரின் முக்ரி ஏரியா பகுதியில் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சீனப்படைகளை இந்திய வீரர்கள் தடுத்து பின்வாங்கச் செய்தனர்.இதில் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் இந்திய வீரர்கள் எச்சரிக்கை செய்தனர்.

செப்டம்பர் 1 அன்று சீனா ரெச்சின் லா அருகே ஒரு பட்டாலியன் அளவுள்ள சீனப்படைகளை குவித்தது.அதன் பிறகு ஸ்பங்குர் ஏரி பகுதியில் இரு பட்டாலியன்கள் அளவிலான படைகளை குவித்தது.

இந்த ரெச்சின் லா மற்றும் ரேசங் லா பகுதிகளை ஆக29/30 இரவில் இந்திய படைகள் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.இந்த உயரத்தில் இருந்து சீனாவின் மோல்டோ இராணுவ குடியிருப்பை இந்தியப் படைகளால் நன்கு கவனிக்க முடியும்.

இந்த பகுதிகளை வியூக முக்கியத்துவம் கருதி சீனப்படைகள் ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகின்றன.

சீனா இரு மோட்டார் படைப் பிரிவுகளை லடாக்கில் நிறுத்தியுள்ளது.ஒரு படைப் பிரிவான 4வது மோட்டார் பிரிவு சூசுல் பகுதியிலும் ,இரண்டாம் பிரிவான 6வது மோட்டார் பிரிவு தௌலத் பெக் ஓல்டி அருகேயும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு பதிலடியாக இந்தியாவும் டேங்க் மற்றும் ஆர்டில்லரி பிரிவுகளை நிறுத்தியுள்ளது.