Breaking News

சீனாவின் எதிர்ப்பை மீறி ஆஸ்திரேலியாவை மலபார் கடற்படை பயிற்சிக்கு அழைக்கவுள்ள இந்தியா !!

  • Tamil Defense
  • July 10, 2020
  • Comments Off on சீனாவின் எதிர்ப்பை மீறி ஆஸ்திரேலியாவை மலபார் கடற்படை பயிற்சிக்கு அழைக்கவுள்ள இந்தியா !!

சீனாவின் எதிர்ப்புகளை உதாசீனம் செய்து விட்டு மிக நீண்ட காலமாக நடைபெற்று வரும் மலபார் கடற்படை போர் பயிற்சியில் ஆஸ்திரேலியாவை இணையுமாறு அழைப்பு விடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்த வாரத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் அரசுகளுடன் கலந்தாலோசித்து விட்டு ஆஸ்திரேலியாவுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த வருடத்திற்கான மலபார் போர்ப்பயிற்சி இந்த வருட இறுதியில் வங்காள விரிகுடா கடலில் நடைபெற உள்ளது என ஒரு மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியா உட்பட இந்த நான்கு முக்கிய ஜனநாயக நாடுகளின் நட்பு என்றுமே சீனாவுக்கு உறுத்தலாக இருந்துள்ளது.

இந்த முறை ஆஸ்திரேலியாவும் இந்த பயிற்சியில் கலந்து கொண்டால் தி க்வாட் (THE QUAD) எனப்படும் நால்வர் கூட்டணியின் (இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா) முதலாவது ராணுவ ரீதியான நடவடிக்கை ஆக மலபார்2020 இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.