
நமது நாட்டின் வெளியுறவு அமைச்சராக இருப்பவர் திரு. சுப்ரமணியம் ஜெய்ஷங்கர் என்பது நம் அணைவருமே அறிந்த விஷயம் தான்.
இவர் ஒரு முன்னாள் வெளியுறவு துறை அதிகாரி, மிகவும் அனுபவம் வாய்ந்தவர், இவரது பல வருட பணிக்காலத்தில் இந்திய வெளியுறவு கொள்கையின் போக்கை மாற்றி திறம்பட கையாண்ட ஒருவர் என கூறலாம்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் சரி தற்போதைய பாஜக ஆட்சியிலும் சரி இருவரின் பாரபட்சம் அற்ற விருப்ப தேர்வாகவே இவர் இருந்துள்ளார்.
இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்தியா தனது அணிசேரா கொள்கைகளில் இருந்து விலகி விட்டதாக தெரிவித்தார்.
மேலும் அணிசேரா கொள்கை என்பது சுதந்திர போராட்ட காலகட்டத்திலும், அதன் பின்னர் 60கள் வரையிலான காலகட்டத்திலுமே தேவைபட்ட ஒன்று,
அதாவது சுதந்திர அடைவதற்கு பல தரப்பட்ட ஆதரவு தேவைபட்ட காரணத்தால் யாருடனும் சேராமல் இருக்க வேண்டி வந்தது, பின்னர் சுதந்திரம் அடைந்ததில் இருந்து 60கள் வரையிலான காலகட்டத்தில் நமது நாடு பின்தங்கிய நிலையில் இருந்தது, உலக அரசியல் பெரிய அளவில் பாதிக்கவில்லை.
ஆனால் 60களுக்கு பிறகு நிலைமை மாறியது படிப்படியான வளர்ச்சி, சீனாவுடனான போர், 71 வங்காளதேச விடுதலை போர், அணு ஆயுத சோதனைகள் என சர்வதேச புவிசார் அரசியல் இந்திய துணை கண்டத்தில் நுழைந்தது.
இன்று நாம் மிகப்பெரிய பொருளாதார சக்திளில் ஒன்று, ராணுவ ரீதியாகவும் பலம் அதிகம், பல உலக நாடுகள் நமது பங்களிப்பை விரும்புகின்றன, இனியும் நாம் வேடிக்கையாளராக (அணிசேரா கொள்கை) இருக்க முடியாது.
உலக அரங்கில் இருக்கும் வாய்ப்புகளை தயங்காமல் நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என இதனை வாய்வழி பேச்சாக இல்லாமல் செயல்பாட்டில் கொண்டு வர வேண்டும் எனவும்,
“நான் ஒதுங்கி இருப்பேன் எனக்கு ஆபத்து இல்லை என தோன்றும் போது வெளி வருவேன்” என்ற நிலைபாட்டை களைந்து விட்டு உலக அரசியலில் நிலவும் ஆபத்துகளை நேரடியாக சந்தித்து சமாளிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.
காலநிலை மாற்றம், வர்த்தகம், பாதுகாப்பு, பயங்கரவாதம், கடல்சார் பாதுகாப்பு, விண்வெளி என நாம் பங்களிக்க வேண்டிய பல துறைகள் உள்ளன எனவும் அமைச்சர் ஜெய்ஷங்கர் குறிப்பிட்டார்.