20 லட்சம் உய்குர் மக்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ள சீன அரசு: ஐரோப்பிய ஒன்றியம்

  • Tamil Defense
  • July 25, 2020
  • Comments Off on 20 லட்சம் உய்குர் மக்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ள சீன அரசு: ஐரோப்பிய ஒன்றியம்

20 லட்சம் உய்குர் மக்களை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ள சீன அரசு: ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் விசாரணை ஆணையம் அமைக்க ஐநா சபைக்கு கோரிக்கை விடுக்க ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல் !!

ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கிய நாடுகள் சபையிடம் உய்குர் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து விசாரணை செய்ய ஆணையம் அமைக்குமாறு வலியுறுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு பிரிவுக்கும், ஐரோப்பிய ஒன்றிய கமிஷனுடைய துணை தலைவர் ஜோஸப் போர்ரல் ஃபான்டெல்லஸ் அவர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

அதில் “சீன அரசு உய்குர் மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருவதாகவும், மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளதாகவும்,

மேலும் பரவலான கைதுகள், தொடர் கண்காணிப்பு, கலாச்சார அழிப்பு, கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், கட்டாய கருத்தடை, மர்மமான கடத்தல்கள், கட்டாய கருக்கலைப்பு போன்ற குருரமான அடக்குமுறைகளை சீன அரசு வன்மத்துடன் அரங்கேற்றி வருவதாகவும்,

சீனாவின் பிற பகுதிகளை சேர்ந்த ஆண்களின் விந்தணுக்களை கொண்டு உய்குர் பெண்களை கட்டாயமாக செயற்கை முறையில் கருத்தரிக்க செய்வது போன்ற செயல்களை இன அழிப்பு நோக்குடன் சீன அரசு அரங்கேற்றி வருகிறது.

சுமார் 80,000 உய்குர் மக்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்க முகாம்களில் அடைத்து வைத்துள்ளதாகவும், மேலும் சுமார் 20 லட்சம் உய்குர் தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஹாங்காங் பகுதியில் இயற்றப்பட உள்ள புதிய சட்டம், அங்கு நிகழ்த்தப்படும் அடக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை குறித்து ஐக்கிய நாடுகள் சபை விசாரணை நடத்த ஆணையம் ஒன்றை அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீன விவகாரங்கள் பற்றிய வல்லுனரான முனைவர். ஏட்ரியன் ஸேன்ஸ் அவர்களின் ஆய்வறிக்கையை இக்கடிதத்தில் சுட்டி காட்டியுள்ளனர், அவரது ஆய்வறிக்கை தகவலின்படி 2015 மற்றும் 2020க்கு இடையிலான காலகட்டத்தில் இயற்கையான கருத்தரிப்புகள் உய்குர் பெண்களிடம் பெருமளவில் குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சீன அரசின் இந்த நடவடிக்கைகள் உய்குர் இனத்தை முற்றிலும் அழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் உள்ளதாகவும், ஐநா சபையின் இன அழிப்பு சட்டத்தின்படி சீனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.