Breaking News

விண்வெளி படைப்பிரிவை உருவாக்கிய ஜப்பான் !!

  • Jecinth Albert
  • June 4, 2020
  • Comments Off on விண்வெளி படைப்பிரிவை உருவாக்கிய ஜப்பான் !!

கடந்த மே 18 ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் டாரோ கானோ தலைமையில் விண்வெளி படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படைப்பிரிவு டோக்கியோ அருகே உள்ள ஜப்பானிய விமானப்படையின் ஃப்யூச்சி விமானப்படை தளத்தில் இருந்து இயங்கும். தற்போது இப்பிரிவில் 20வீரர்கள் உள்ளனர். 2023ஆம் ஆண்டு முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது 100 வீரர்கள் இப்பிரிவில் இருப்பர் என கூறப்படுகிறது.

16,000 வீரர்கள் கொண்ட அமெரிக்காவின் விண்வெளி படையை போன்று தனி ராணுவ படைப்பிரிவாக இயங்காமல் ஜப்பானிய விண்வெளி படைப்பிரிவு ஜப்பானிய விமானப்படையின் ஒரு அங்கமாகவே இயங்கும்.

அமெரிக்க விண்வெளி படையானது தொலைதூர செயற்கை கோள் அழிப்பு ஏவுகணைகளை கொண்டுள்ளது ஆனால் ஜப்பானிடம் அத்தகைய ஆயுதங்கள் எதுவும் இல்லை.

இப்படைப்பிரிவின் நோக்கம் ஜப்பானிய செயற்கைகோள்களுக்கு ஆயுதங்கள் , விண்வெளி குப்பைகள் வடிவில் வரும் ஆபத்துகளை கண்டறிவது, விண்கற்களை கண்காணிப்பது, பிற நாட்டு செயற்கை கோள்களை கண்காணிப்பது போன்ற பணிகளாகும்.

கடந்த 1969ஆம் ஆண்டு ஜப்பானிய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி விண்வெளியில் ராணுவம் தவிரத்த செயல்களில் மட்டுமே ஜப்பான் அரசு ஈடுபட முடியும் என்றிருந்த நிலைமை கடந்த 2008ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தினால் மாற்றம் பெற்றது. இநத் புதிய சட்டத்திருத்தம் மூலமாக ஜப்பான் தனது சொந்த பாதுகாப்பு காரணமாக விண்வெளியில் ராணுவம் சார்ந்த செயல்களில் ஈடுபட அனுமதி கிட்டியது.

வருங்காலத்தில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இது சார்ந்த தொழில்நுட்பங்களை அதிகளவில் உருவாக்கி இணைந்து செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.