
கல்வான் பிரச்சினைக்கு பின்பு மீண்டும் இந்திய சீன உயர் ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.இதில் இரு நாடுகளும் படைகளை பின்வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாங்காங் ஸோ ஏரிக்கு அருகேயுள்ள பகுதியில் சில பகுதிகளில் சீனா தனது படைகளை குவித்துள்ளது. இதனையடுத்து இந்த பிரச்சினையை முடிப்பதற்காக இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
சீனா ஜூன்16 அன்றே இதுகுறித்து அனுப்பிய அறிவிக்கைக்கு கல்வான் பகுதியில் இருந்து படைகளை பின்வாங்காமல் எவ்வித பேச்சுவார்த்தைகளுக்கும் இந்தியா வரப்போவதில்லை என அழுத்தம் திருத்தமாக இந்தியா பதில் அனுப்பியது.
இதை அடுத்து கல்வான் பள்ளதாக்கில் உள்ள பிபி14 எனப்படும் பகுதியில் இருந்து சீனா தனது படைகளை விலக்கி கொண்டது, இதனை தொடர்ந்து இந்த பேச்சவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்தியா சார்பில் லெஃப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் சீனா சார்பில் மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் இதில் பங்கு பெற்றனர்.
பாங்காங் அருகே சீனா படைகளை குவித்துள்ள நிலையில் இந்தியாவும் பல்வேறு படையணிகளை அங்கு குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சீனப்பகுதியான மோல்டோவில் நடைபெற்ற 11 மணி நேர பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது.எவ்வாறு இந்த விலக்கல் நடைபெற வேண்டும் என்பது குறித்து மேற்கொண்டு பேச்சுவார்த்தையில் பேசி முடிவெடுக்க வேண்டும்.
ஹாட் ஸ்பிரிங்,கோக்ரா,கல்வான் பகுதியில் சீனப் படைகள் பின்வாங்குவது எளிது தான் ஆனால் பங்கோங் பகுதியில் அது நிரந்தர பங்கர்கள் சிலவற்றை கட்டி மறைப்புகளை ஏற்படுத்தியுள்ளது.அவற்றை அகற்றுவது கடினமான பணியாக இருக்கலாம்.