பல உலக நாடுகள் சீனாவுக்கு எதிராக அணிதிரண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதில் ஐந்து வகையான நடவடிக்கைகள் உள்ளடங்கி உள்ளன.
1) கொரோனா நீதி விசாரணை:
பல நாடுகள் கொரோனாவின் தோற்றம் குறித்த நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
ஆஸ்திரேலியா முதலாவது நாடாக கோரிக்கை வைத்தது, இதனை நியூசிலாந்து அரசும் வழிமொழிந்து உள்ளது.
அமெரிக்கா தனது சார்பாக சில விசாரணை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு நடவடிக்கைகள் பிரிவின் தலைவரும் சுதந்திரமான அறிவியல் ரீதியான விசாரணை வேண்டும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அடுத்த உலக சுகாதார கூட்டத்தில் இந்த விஷயத்தை எழுப்பி விவாதம் செய்ய பல நாடுகள் முடிவெடுத்து உள்ளன.
2) தைவான் அரசுக்கு ஆதரவும், அங்கீகாரமும்:
சீனா உரிமை கோரி ஆக்கிரமிப்பு செய்ய நினைக்கும் தைவான் நாட்டிற்கு சீனாவை வெறுப்பேற்றும் விதமாக பல நாடுகள் ஆதரவும் அங்கீகாரமும் அளித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தைவான் உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினராக சேர்க்கப்பட கனடா, ஜப்பான், ஃபிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஸ்வாஸிலாந்து போன்ற சிறிய நாடுகள் கூட ஆதரவு தெரிவித்து உள்ளன.
சீனா இதற்கு கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
3) பொருளாதார நடவடிக்கைகள்:
அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தங்களது நாட்டு நிறுவனங்களை சீனாவை விட்டு வெளியேற உத்தரவிட்டு உள்ளன.
இதனை இந்தியா, வியட்நாம், இந்தோனெசியா போன்ற நாடுகள் பயன்படுத்தி கொண்டு சீனாவை விட்டு வெளியேறும் நிறுனங்களை தங்களது நாடுகளுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராகி உள்ளன.
ஜப்பான் அரசு 2.2பில்லியன் டாலர் பணத்தை இதற்கென ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்களது உள்நாட்டு தொழில்கள் சீன நிறுவனங்களால் நசுக்கப்படாமல் இருக்கும் வகையில் பல்வேறு பொருளாதார கட்டுபாடுகளை விதித்து வருகின்றன.
4) மனித உரிமை மீறல்கள்:
உய்குர் இஸ்லாமிய மக்களை நசுக்கி வரும் சீன அரசை கண்டித்தும், அங்கு நடைபெறும் அடிப்படை மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கைகளை பல நாடுகள் முன்வைத்துள்ளன. அமெரிக்க செனட்டில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி ஆகியவை இணைந்து சீனா மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஒரு சட்டத்தினை நிறைவேற்றி உள்ளனர்.
மேலும் சீனாவின் குவாங்கசோ மாகாணத்தில் ஆஃப்ரிக்க மாணவர்கள் மீது இனரீதியாக நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்த விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5) சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது தடை:
சீன தொழில்நுட்ப நிறுவனங்களின் தயாரிப்புகள் தகவல் திருட்டில் மிக முக்கிய பங்கு வகிப்பதாக உலகம் முழுவதும் பரவலாக சந்தேகம் உள்ளது. இதில் ஹூவாய் நிறுவனம் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது.
அமெரிக்கா ஏற்கனவே ஹீவாய் மீது தடை விதித்துள்ள நிலையில் பல நாடுகள் நடவடிக்கைகளை எடுக்கலாம் என கூறப்படுகிறது.