
ஒரு புதிய திட்டத்தின் கீழ் இந்திய தரைப்படை துணை ராணுவப்படை வீரர்கள் சிறிது காலம் ராணுவத்தில் பணியாற்றும் வகையில் ஒரு சீர்திருத்தம் மேற்கொள்வதை குறித்து தரைப்படை தலைமையகம் பரிசீலனை செய்து வருவதாக தரைப்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தரைப்படையில் நிலவும் ஆள்பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில் இதைப்போன்ற வேறு சில திட்டங்கள் குறித்தும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
அதில் ஒன்று நாட்டின் திறம்வாய்ந்த இளைஞர்களை படையில் இணைய தூண்டும் வகையில் “மூன்று வருட சேவை” திட்டம் ஒன்றிற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் அதிகாரிகள் பற்றாக்குறையை சமாளிக்க உதவும் வகையில் அதிகாரிகளுக்கான குறைந்த சேவைக்கால திட்டத்தின் கீழ் ஒரு புதிய வழிமுறை குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. முதலில் இத்திட்டத்தின் கீழ் மூன்று வருடமாக இருந்த சேவைக்காலம் பின்னர் 10வருடமாக அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.