
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் சதிஷ் ரெட்டி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் “அஸ்திரா ஏவுகணையின் வெர்டிக்கல் லாஞ்ச்” அதாவது செங்குத்தாக செல்லும் வடிவத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவித்தார்.
இந்த ஏவுகணையானது நமது சொந்த தயாரிப்பில் தயாராகும் 5ஆவது வான் பாதுகாப்பு அமைப்பாக இருக்கும் மேலும் தரையில் இருந்து இயங்கும் அஸ்திரா 360டிகிர சுற்றளவுக்கு 10 -15 கிமீ வரை தாக்கும் திறன் கொண்டிருக்கும், கூடுதல் பூஸ்டர்கள் இணைக்கப்பட்டால் 30கிமீ வரை தாக்குதல் நடத்தும் திறன் பெறும். இது ஆளில்லா விமானங்கள், போர் விமானங்கள், உலங்கு வானூர்திகள் மற்றும் துல்லிய தாக்குதல் குண்டுகளை இடைமறித்து அழிக்கும்.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் கடற்படையின் கப்பல்களும் பயன்படுத்தும் வகையிலான அஸ்திரா ஏவுகணை உருவாக்கப்படும் என்பது தான். இது 20-25 கிமீ வரை தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது மேலும் 70கிமீ தாக்குதல் வரம்பு கொண்ட மற்றோர் வான் பாதுகாப்பு அமைப்புடன் ஒன்றிணைந்து செயல்படும். இந்த வடிவமானது 360டிகிரி சுற்றளவில் எதிரி விமானங்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் உலங்கு வானூர்திகள் ஆகியவற்றை தாக்கி அழிக்கும்.
இந்த கடற்படை அஸ்திரா ஏவுகணைகள் நமது முன்னனி போர்க்கப்பல்களில் பயன்படுத்தி வரப்படும் இஸ்ரேலிய பராக் ஏவுகணைகளுக்கு மாற்றாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.