அடுத்த போரை உள்நாட்டு ஆயுதங்களை வைத்து போரிட்டு வெற்றி பெறும் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(டிஆர்டிஓ)வின் கூட்டத்தில் ராணுவ தளபதி பிபின் ராவத் பேசும்போது,
அடுத்த போரை, உள்நாட்டு ஆயுதங்களை வைத்து போரிட்டு இந்தியா வெற்றி பெறும். எதிர்கால போரில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. எதிர்கால போருக்கான அமைப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். சைபர், விண்வெளி, லேசர், மின்னணு, ரோபோடிக் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள், உள்நாட்டில் தயாராகும் ஆயுதங்கள் மூலம், ராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசுகையில்,தொழில்நுட்பங்கள் இந்தியாவை பாதுகாப்பானதாக மாற்றுகிறது. பாதுகாப்பு அமைப்புகள், உளவுத்துறைகள் ஆகியவற்றுடன் இணைந்து, எதிரிகளுக்கு கடுமையான பதிலடி கொடுப்பதற்கு நமக்கு என்ன தேவை என்பது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும். நன்கு பயிற்சி பெற்ற ராணுவம், தாக்குதல் மற்றும் இலக்கு குறித்து முடிவு செய்கிறது. அதனிடம் தான் எப்போதும் உயரிய தொழில்நுட்பம் இருக்கும்.
இந்திய வரலாற்றில் நாம் இரண்டாவது இடம் வந்ததற்கான வரலாறு உள்ளது. ஆனால், இரண்டாம் இடம் வந்தவர்களுக்கு எந்த கோப்பையும் கிடையாது. எதிரிகளை விட நீங்கள் சிறந்தவராக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். ஆனால், நவீன உலகில் பணமும், தொழில்நுட்பமும் தான், ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த இரண்டில் தொழில்நுட்பம் தான் முக்கியம் என்றார்.