பாலகோட் தாக்குதல் சம்பவம் நடந்த மறுநாள் ஜம்மு, காஷ்மீரில் இந்திய விமானப்படை வான்பாதுகாப்பு அமைப்பு அதற்கு சொந்தமான ஹெலிகாப்டர் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவத்தில் ஆறு விமானப்படை வீரர்கள் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.
இந்திய விமானப்படை விமானம் ஒன்றில் இருந்து வந்த ஏவுகணைதான் பிப்ரவரி 27 அன்று அந்த எம்.ஐ -17 ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விமானப்படை தளபதி ராகேஷ் குமார் சிங் பதோரியா, “அது ஒரு மிகப் பெரிய தவறு என்பதை ஒப்புக்கொள்கிறோம்; இது வரும் காலங்களில் மீண்டும் நடக்காது ” என்று தெரிவித்துள்ளார் என ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பான விசாரணை ராணுவ தீர்ப்பாயத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், இதுகுறித்து மேலும் பேசிய விமானப்படை தளபதி, “நமது ஏவுகணையே, ஹெலிகாப்டரை தாக்கியது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாக மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.