இந்தியாவுக்குள் ஊடுருவும் சந்தர்ப்பத்துக்காக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முகாம்களில் 500 பயங்கரவாதிகள் காத்து கொண்டிருப்பதாக இந்திய ராணுவத்தின் வடபிராந்திய படைப்பிரிவு தளபதி ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பதேர்வா (BHADERWAH/JAMMU) எனுமிடத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவ எத்தனை பயங்கரவாதிகள் முயன்றாலும், அவர்களை தடுத்து நிறுத்தும் திறனும், அழிக்கும் திறனும் இந்திய ராணுவத்திடம் உண்டு என்றும் தெரிவித்தார்.
இதேபோல் ஜம்மு-காஷ்மீரில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர் என்றும், பாகிஸ்தான் ஆதரவுடன் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்துவதுதான் அவர்களின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானின் ஆதரவு தொடர்கதையாகி வருவதாகவும், பாகிஸ்தானுக்குள்ளேயே அந்நாட்டு ராணுவத்தாலும், உளவு அமைப்பாலும் பயங்கரவாத பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் ரன்பீர் சிங் கூறினார்.
ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் பஞ்சாபில் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆயுதம் வீசி வருவது குறித்த கேள்விக்கு, பாகிஸ்தானின் சதித் திட்டம் ஒருபோதும் வெற்றியடையாது என்று ரன்பீர் சிங் கூறினார்.
பாலிமர்