ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக, ஐரோப்பிய யூனியனின் பார்லிமென்ட் குழு, கருத்து தெரிவித்துள்ளது.
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற, 27 நாடுகள் இணைந்து, ஐரோப்பிய யூனியன் என்ற பொதுவான அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த அமைப்பின் பார்லிமென்ட், பெல்ஜியம் நாட்டின் பிரஸ்சல்ஸ் நகரில் உள்ளது. இங்கு, நேற்று நடைபெற்ற பார்லிமென்ட் கூட்டத்தில், ஜம்மு – காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சு எழுந்தது. அப்போது, பேசிய உறுப்பினர்கள், ரைசார்ட் ஸார்னெக்கி மற்றும் புல்வியோ மார்டஸ்சிலோ ஆகியோர், இந்தியாவுக்கு ஆதரவாக உரையாற்றினர்.
அதன் விபரம்: இந்தியா ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடு. இங்கு நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களை, நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். பயங்கரவாதிகள், நிலவில் இருந்து குதிக்கவில்லை. இவர்கள், அண்டை நாட்டில் இருந்து வருகின்றனர். எனவே, இந்த விவகாரத்தில், நாம், இந்தியாவுக்கு ஆதரவளிக்க வேண்டும். அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம் என, பாகிஸ்தான் மிரட்டுவது, ஐரோப்பிய யூனியனுக்கு கவலை அளிக்கிறது. ஐரோப்பாவில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கூட, பாகிஸ்தானில் இருந்து தான், பயங்கரவாதிகள் திட்டங்களை தீட்டுகின்றனர். இவ்வாறு, அவர்கள் பேசினர்.