இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் கீழ், விண்வெளிக்கு செல்லும் வீரர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும், ககன்யான் திட்டத்தை, வருகிற 2022ம் ஆண்டு இஸ்ரோ செயல்படுத்த உள்ளது.
அந்தவகையில் முதலில் அனுப்பப்படவுள்ள ககன்யான் விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பயணிக்க உள்ளது. இதற்கென வீரர்களை தேர்வு செய்யும் பணியை இந்திய விமானப்படை தற்போது தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்ற வீரர்களுக்கு தீவிர உடற்திறன் சோதனை, மருத்துவ பரிசோதனை மற்றும் மனோதிடம் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டது.
இதில் 30 வீரர்கள் தேர்வு செய்துள்ள இந்திய விமானப்படை அவர்களுக்கு நடந்த உடல்தகுதி சோதனை புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வானவர்களில் 3 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு, விண்வெளி சார்ந்த பயிற்சிக்கு ரஷ்யாவுக்கு அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த பின் அளித்த பேட்டியில், ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யா பயிற்சி வழங்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.