2,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி 21 பேரை கொன்றது’ – பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு

2,050 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தி 21 பேரை கொன்றதாக, பாகிஸ்தான் மீது இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு கூறியுள்ளது.

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக்கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதிகளில், 2003-ம் ஆண்டு போடப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடாவடி தாக்குதலில் ஈடுபடுவதை பாகிஸ்தான் வழக்கமாக்கி கொண்டுள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு இதுவரை பாகிஸ்தான் 2,050 முறை சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல்கள் நடத்தி உள்ளது; இந்த தாக்குதல்களில் 21 இந்தியர்கள் பலியாகி உள்ளனர் என மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், “ எல்லை கட்டுப்பாட்டு கோடு, சர்வதேச எல்லையில், 2003-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்றி நடக்க வேண்டும்; அமைதியையும், சமாதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் தனது படைகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என பல முறை இந்தியா வலியுறுத்தி உள்ளது” என குறிப்பிட்டார்.

மேலும், “இந்திய படைகள் அதிகபட்ச கட்டுப்பாட்டை கொண்டுள்ளன. அத்துமீறிய தாக்குதல்களுக்கும், பயங்கரவாதிகள் எல்லை தாண்டி ஊடுருவ முயற்சிப்பதற்கும் அவை பதிலடி கொடுக்கின்றன” எனவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.