பாகிஸ்தான் வாலாட்ட நினைத்தால், கடும் தண்டனையாக அமையும் வகையில் பதிலடி கொடுக்கப்படும் என ராணுவத் தளபதி பிபின் ராவத் எச்சரித்துள்ளார்.
கார்கில் போர் வெற்றியின் 20ஆவது ஆண்டை குறிக்கும் வகையில், டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில், ராணுவத் தளபதி பிபின் ராவத் பங்கேற்று உரையாற்றினார். தீவிரவாதிகள் மூலமும், ஊடுருவல்கள் மூலமாகவும், மறைமுகப் போர்கள் மூலமும் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது குருட்டு சாகசங்களில் இறங்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
எல்லைகளை உறுதியாகப் பாதுகாத்து நிற்கும் இந்திய ராணுவம், இத்தகைய குருட்டு சாகச முயற்சிகளுக்கு தகுந்த பதிலடி வழங்கும் எனவும் பிபின் ராவத் கூறினார். கார்கில் போரின்போது இந்திய வீரர்களின் எத்தனையோ தடைகளை தகர்த்து வீரஞ்செறிந்த போர் மூலம் மாபெரும் வெற்றியை ஈட்டியதாக பாராட்டு தெரிவித்தார்.
எதிர்காலங்களில் போர்களில் தொழில்நுட்பம் என்பது மிகமுக்கிய பங்கு வகிக்கும் எனக் குறிப்பிட்டார். அதேசமயம், எதிர்காலங்களில் ராணுவ மோதல்கள் அதிக வீரியம் மிக்கதாகவும், முன்கணிக்க முடியாததாகவும் இருக்கும் என்பதால், மனிதர்களின் பங்கும் முக்கியமானதாக இருக்கும் என அவர் தெரிவித்தார். இந்திய ராணுவத்தைப் பொறுத்தவரையில், வீரர்களே முதன்மையான சொத்துகள் என்றும் பிபின் ராவத் கூறினார்.