மும்பைத் தாக்குதலில் தமக்குத் தொடர்பில்லை என ஹபீஸ் சையத் மறுப்பு
மும்பையில் 2008ம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் தமக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் லாகூர் உயர் நீதிமன்றத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சையத் தெரிவித்துள்ளார்.
தம் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவின் தொடர்ந்த வலியுறுத்தலால் தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு உலகநாடுகளின் நெருக்குதல் அதிகமானது. இதையடுத்து சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த ஹபீஸ் சையத் மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் ஹபீஸ் சையத்துக்கு உள்ள தொடர்பு குறித்த விசாரணையில், தமக்கும் அந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று ஹபீஸ் சையத் மறுத்துள்ளார். ஆனால் ஹபீஸ் சையத் மீது பாகிஸ்தான் தொடர்ந்த வழக்குகள் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியது போன்ற பிரிவுகளின் கீழ் உள்ளவையே என்றும் சர்வதேச சமூகத்தினரை ஏமாற்ற பாகிஸ்தான் கண்துடைப்பு நாடகமாடுவதாகவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது