ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் இரண்டு தீவிரவாதிகளை, பாதுகாப்புப் படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.
குல்காம் மாவட்டம் கோபால்போரா என்ற இடத்தில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவத்தினருக்கு இன்று அதிகாலை தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்ற பாதுகாப்புப் படை வீரர்கள், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகித்த இடங்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது தீவிரவாதிகளும் துப்பாக்கியால் சுடவே, கடும் சண்டை நடைபெற்றது.
ஒரு மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில், இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று ராணுவ உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர். தேடுதல் வேட்டை தொடரும் நிலையில் குல்காமில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
பாலிமர்