இந்திய எல்லைக்குள் பறந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
பஞ்சாபின் டான் தரன் மாவட்டத்தில் உள்ள கேம் கரண் எனும் பகுதியில் நேற்றிரவு இந்த விமானம் பறந்துள்ளது. இதனைக் கவனித்த எல்லை பாதுகாப்புப் படையினர், விமான எதிர்ப்பு துப்பாக்கிகளைக் கொண்டு சுட்டுள்ளனர். இதனையடுத்து அந்த ஆளில்லா விமானம் எரிந்து கீழே விழுந்துள்ளது. எனினும், அந்த விமானம் இந்திய எல்லைக்குள் விழுந்ததா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த தாக்குதலை அடுத்து, எல்லைப் பகுதி உஷார் படுத்தப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லையில் அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற அடுத்தடுத்த தாக்குதல்களால், ஜம்மு காஷ்மீர் எல்லை சற்று பதற்றத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.