மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க தவறினால், பிராந்திய நிலைத்தன்மை மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்கு எதிரானதாக அமைந்துவிடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றது. பாகிஸ்தானில் வசித்துவரும் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் என ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. சீனா மட்டும் முட்டுக்கட்டை போட்டு வருகிறது. மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டுமென்றால், சீனாவின் ஆதரவு தேவைப்படுகிறது.
இதற்கான ஓட்டெடுப்பு ஐநா கவுன்சிலில் நடைபெறவுள்ள நிலையில், மசூத் அசாருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாகவும், எனவே சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வேண்டும் எனவும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.