காஷ்மீரில் அடுத்தக் கட்ட நடவடிக்கை , பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்
காஷ்மீரில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிப்பதற்காகவும் அனைத்து அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்தவும் இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று பிரதமர் மோடி தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதாக முடிவு செய்யப்பட்டது. காஷ்மீர் சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி திரும்பியதும் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகக் கட்டடத்தில் இன்று காலை 11 மணியளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. காஷ்மீர் தாக்குதல் குறித்த தகவல்களை அனைத்துக் கட்சியினருடன் பகிர்ந்துக் கொள்வதுடன் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் மத்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும் முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது. காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா ஒன்றுபட்டு இருப்பதாக தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.