காஷ்மீருக்குள் அத்துமீறி நுழைந்து தாக்க முயன்ற பாகிஸ்தான் விமானம்: சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்

பாகிஸ்தான் பகுதிக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை தகர்த்துள்ள நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் விமானம் இன்று இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்த முயன்றது. பாகிஸ்தான் விமானங்களில் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது  நேற்று  தாக்குதல் நடத்தின. 12 விமானங்கள், சுமார் 1000 கிலோ வெடிகுண்டைத் தீவிரவாத முகாம்கள் மீது வீசி, அவற்றை முற்றிலுமாக அழித்தன.

இதில் பாலகோட், சாக்கோட்,  முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன. அங்கு இயங்கிவந்த முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு பெரும் பின்னடைவாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது. விமானப்படை தாக்குதல் பாகிஸ்தானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது. தாக்குதல் நடத்தும் திட்டத்துக்குள் அந்த விமானங்கள் இந்திய பகுதிக்குள் வந்திருக்கலாம் என தெரிகிறது.  இதையடுத்து இந்திய ராணுவ வீரர்கள் உடனடியாக பதிலடி தாக்குதலை நடத்தினர். இதையடுத்து அந்த விமானங்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றன. எனினும், அவற்றில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

மற்றொரு விமானம் அங்கிருந்து தப்பிச் சென்றது. சுட்டு வீழ்த்தப்பட்ட எப் 16 விமானம் லேம் பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து காஷ்மீரில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் உட்பட காஷ்மீரில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு எல்லை முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.