‘சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்’: மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள்

சமாதானத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

சமீபத்தில் ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் புல்வாமா தாக்குதல் குறித்து பேசிய மோடி, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் ஒன்றிணைந்துள்ளது. பயங்கரவாதத்திற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும். பயங்கரவாதத்திற்கு நல்ல முறையில் முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது. இந்த வலியை பொறுத்துக் கொள்ள முடியாது. பயங்கரவாதத்தை எப்படி ஒடுக்க வேண்டும், எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என எங்களுக்கு தெரியும் என்றார்.

அபுதாபியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கூறியதாவது-

“இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உறவு மீண்டும் அபாய கட்டத்திற்கு சென்று விட்டது. வருங்காலத்தில் இரு நாடுகள் இடையே அணு ஆயுத தாக்குதல் நடைபெறாது. அப்படி ஒருவேளை நாம் (பாகிஸ்தான்) இந்தியா மீது ஒரு அணுகுண்டு வீசி தாக்கினால் அவர்கள் நம்மை 20 அணுகுண்டுகள் வீசி அழித்து விடுவார்கள் என்றார்.

புல்வாமா தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

துரதிருஷ்டவசமாக, இந்தியாவில் தேர்தல்களால் இப்போது சமாதானம் மழுங்கியுள்ளது. தாக்குதல் தொடர்பான உளவுத்துறை ஆதாரங்களை இந்தியா கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம். பிரதமர் மோடி சமாதானத்திற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

முன்னதாக பிப்.,19-ம் தேதி இம்ரான்கான் அளித்த பேட்டியில்,

புல்வாமா தாக்குதலுக்கான ஆதாரத்தை இந்தியா கொடுத்தால் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி இருந்தார். அதே சமயம், இந்த தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்க நினைத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்தியாவை அவர் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.