தீவிரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் வீரமரணம்
காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் ரட்னிபோரா என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு விரைந்த பாதுகாப்புப் படை வீரர்கள், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படை வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர்.
அதேபோல் பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மீதும் கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதனை தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்தது. துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஹவில்தார் பல்ஜித் சிங் வீரமரணம் அடைந்தார். மற்றொரு ராணுவ வீரர் படுகாயம் அடைந்து உள்ளனர். துப்பாக்கி சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.