அபிநந்தன் : இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் நாளை விடுவிப்பு – இம்ரான் கான்

இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்றுபாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படை புதன்கிழமை தாக்குதல் நடத்தியபோது இந்திய – பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அதில் ஒரு இந்திய விமானம் வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அந்த வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்மா-வை பாகிஸ்தான் தன் பிடியில் எடுத்தது.
முன்னதாக, அபிநந்தன் வர்மாவை ஒரு கும்பல் தாக்கும் படங்கள் வெளியாயின. பிறகு மாலை பாகிஸ்தான் வெளியிட்ட ஒரு காணொளியில் காபி அருந்தியபடி பேசும் அபிநந்தன், தம்மை பாகிஸ்தான் ராணுவம் மரியாதையாக நடத்துவதாகத் தெரிவித்தார்.
இதனிடையே அபிநந்தனை கண்ணியமாக நடத்தவேண்டும் என்ற குரல்கள் இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் எழுந்தன. பிறகு, அபிநந்தனை விடுதலை செய்யவேண்டும் என்று இந்திய அரசு வலியுறுத்தியது. சமூக ஊடகத்திலும் இந்தக் கோரிக்கை எதிரொலித்தது.
இந்நிலையில், அபிநந்தனை விடுதலை செய்வதன் மூலம் போர்ப் பதற்றம் தணியும் என்றால் அவரை விடுதலை செய்யத் தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி அறிவித்தார். இந்நிலையில்தான், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவரை விடுதலை செய்யும் முடிவை அறிவித்தார் அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான்.
அமைதியின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் இம்ரான் கான் கூறியதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேஜையை தட்டி ஆர்ப்பரித்தனர். 

கடந்த சில நாள்களில் நடந்துவரும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் நிகழ்வுகளில் பாகிஸ்தான் ஊடகம் நடந்துகொள்ளும் விதத்தை பாராட்டினார் இம்ரான்கான். “பாகிஸ்தான் ஊடகத்தின் முதிர்ச்சி பாராட்டத்தக்கது. ஆனால், இந்திய ஊடகம் குறித்து இப்படி சொல்ல முடியாது என்பதை நான் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய ஊடகம் போரை ஆதரித்து பிரசாரம் செய்வது தொடர்ந்து வருகிறது” என்று அவர் கூறினார்.
“பாகிஸ்தான் எச்சரிக்கையோடும், சுய கட்டுப்பாட்டுடனும் நடந்துகொண்டது. இந்திய அத்து மீறலுக்கு பதிலடி தந்ததுகூட, எங்கள் இறையாண்மையை காத்துக்கொள்ளும் வல்லமை எங்களுக்கு உண்டு என்பதைக்காட்டத்தான்” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சனையில், இறுக்கமும், பதற்றமும் அதிகரிப்பது பாகிஸ்தானுக்கு நல்லதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.