விமானப்படை தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தான் மீது நடந்த விமானப்படை தாக்குதல் பற்றி இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது;-
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் பற்றி பாகிஸ்தானுக்கு தகவல் தந்தோம். பலமுறை தகவல் தந்தும் பயங்கரவாத முகாம்களை அழிக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜெய்ஷ் – இ- முகமது அமைப்பு மீண்டும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மற்றொரு தாக்குதல் நடைபெறாமல் இருக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
பாலாகோட் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். விமானப்படையின் தாக்குதலில் பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார். ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மிகப்பெரிய தீவிரவாதிகள் பயிற்சி முகாம் அழிக்கப்பட்டது என கூறினார்.