கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இந்நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட் என்ற இடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் 2000 ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாதிகள் முகாம் மீது வீசி அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலகோட் பகுதியில் நடந்த தாக்குதலில் ஜெயிஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாம் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 200-300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் ஆங்கில தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜெயிஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் 3 கட்டுப்பாட்டு அறைகள் சேதமடைந்ததாகவும், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பாலகோட், முசாபர்பாத், சக்கோட்டி பகுதிகளில் நடந்த தாக்குதலில், பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறும்போது, எல்லையை தாண்டி இந்திய போர் விமானங்கள் ஊடுருவியதாகவும், பாகிஸ்தான் விமானப்படை அதனை விரட்டியடித்ததாகவும் தெரிவித்துள்ளார்.